அதிர்ச்சி! சுயேச்சை வேட்பாளர் வழங்கிய நாணயம் தங்கம் அல்ல, பித்தளை!!
அதிர்ச்சி! சுயேச்சை வேட்பாளர் வழங்கிய நாணயம் தங்கம் அல்ல, பித்தளை!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் வழங்கிய நாணயம் பித்தளை என தெரியவந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆம்பூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தல் நடைபெற்றது. அதில் கம்பிகொல்லை பகுதியில் மணிமேகலை துரைப்பாண்டி என்பவர் சுயேட்சை வேட்பாளராக தென்னை மர சின்னத்தில் போட்டியிட்டார்.
வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான பிப்ரவரி 18ஆம் தேதி இரவு மணிமேகலை மற்றும் அவரது கணவர் துரைப்பாண்டி ஆகியோர், அந்த பகுதியில் வீடு வீடாக சென்று தங்க நாணயம் ஒன்றை வழங்கி, தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுள்ளனர்.

மேலும் ஓம்சக்தி உருவம் பொறித்த அந்த நாணயத்தை, 3 நாட்கள் கழித்து பார்க்கும் படியும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பிரச்னையாகும் என்றும் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அடகு கடைக்கு சென்று காண்பித்தபோது, அது பித்தளை என தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் பித்தளை நாணயத்தை கொடுத்து தங்களை ஏமாற்றியதாக சுயேச்சை வேட்பாளர் மீது புகார் தெரிவித்துள்ளனர். மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.
newstm.in

