ரேஷன் ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.. பதிவாளர் பிறப்பித்த உத்தரவும் பதில் அறிக்கையும் !!
ரேஷன் ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.. பதிவாளர் பிறப்பித்த உத்தரவும் பதில் அறிக்கையும் !!

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் என மொத்தம் 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதாவது ஒரு கடைக்கு ஒரு பணியாளர் கூட இல்லாத அளவுக்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது.
இதன் விளைவாக பல இடங்களில் ஒரே நபர் இரண்டு அல்லது மூன்று கடைகளை கூடுதலாக கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பணிச்சுமையால் ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் கூட்டுறவு நியாய விலை கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர், அளவையாளர்களுக்கு கடந்த 01.01.2022 முதல் அகவிலைப்படியை நிறுத்தி வைப்பதாக பதிவாளர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது.

இதனால் ரேஷன் ஊழியர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். கொரோனா, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும் இரவு, பகல் பாராமல் பணி செய்யும் ரேஷன் ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க தலைவர் ஜி.ராஜேந்திரன் மற்றும் பொதுச்செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள 26,000 கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர், அளவையாளர்களுக்கு கடந்த 01.01.2022 முதல் அகவிலைப்படி நிறுத்தி வைப்பதாக பதிவாளர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு 01.04.1996 முதல் காலமுறை ஊதியமும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வும் பொருந்தும் நிலை உள்ளது. இந்த சூழலில், தற்போது 30.03.2022 வரை அடிப்படை ஊதியத்துடன் 14% அகவிலைப்படியுடன் ஊதியம் தொடர்ந்து பெற்று வருகிறோம். எனவே கடந்த 01.01.2022 முதல் தமிழக அரசால் உயர்த்தி அறிவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியை நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து ரேஷன் ஊழியர்களின் துயரத்தை துடைக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.
newstm.in

