அதிமுகவில் ஒற்றை தலைமை.. எம்ஜிஆர் உயிலில் கூறி இருப்பது என்ன..?
அதிமுகவில் ஒற்றை தலைமை.. எம்ஜிஆர் உயிலில் கூறி இருப்பது என்ன..?

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்து, மீண்டும் ஒன்றாக இணைந்து, தற்போது மீண்டும் இரண்டாக மாற இருக்கிறது அதிமுக.
ஒற்றைத் தலைமைக்காக எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட தன்னுடைய எல்லா ஐடியாக்களையும் அமல்படுத்தி பொதுச்செயலாளர் பதவியை நெருங்கிவிட்டார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கட்டை போட 8 திசையிலும் முயன்று கொண்டிருக்கிறார். முதலில் டெல்லிக்கு சென்ற அவர் அடுத்ததாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அதிமுக தொண்டர்கள் என் பக்கம் தான் உள்ளனர் என்றார்.
அதுமட்டுமின்றி, இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நடத்திய தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு போட்டியாக நாளை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு 80% கட்சி துணை நிற்பதால், ஜூலை 11-ம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பில் அமர்ந்துவிடுவார் என்றே பலரும் கருதுகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி. பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் உயிலை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ளார்.
அதில், “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் 18.01.1987 அன்றைய தேதியில் அதிமுகவில் உள்ள உறுப்பினர்களில் 80% பேர் ஆதரவை பெற்றவர்கள் தலைமையில் கட்சி வழி நடத்த வேண்டும் என்று தன்னுடைய உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் எம்ஜிஆர் தொண்டர்களால் ஒரு தலைமையை தேர்ந்தெடுப்போம். நிச்சயமாக அது இந்த சுயநலவாதிகளும், அடிமைகளும், ஊழல்வாதிகளும் அல்லாத தலைமையை தேர்ந்தெடுப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

