விரைவில் ரேஷனில் எரிபொருள் வழங்கும் முறை திட்டம் அறிமுகம்! அரசு அதிரடி
விரைவில் ரேஷனில் எரிபொருள் வழங்கும் முறை திட்டம் அறிமுகம்! அரசு அதிரடி

கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் இலங்கையில் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், எரிபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து இருக்கின்றன.
இதனிடையே பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, வரிகள் மற்றும் ஆடம்பரப் பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்தி இருக்கிறார். சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கும் நிலையில், பொருளாதார கட்டமைப்பை சீரமைக்கும் வரையில் கடனுதவி அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படாது என உலக வங்கி கூறிவிட்டது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கடுமையான வீழ்ச்சி, குறைந்து வரும் எரிவாயு இருப்புக்கள் மற்றும் உக்ரைனில் நிலவும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணங்களால் எரிபொருள் இறக்குமதி செய்ய இலங்கை சிரமப்படுகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தன்னெழுச்சியாக மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ரேஷன் முறையில் எரிபொருள் வழங்கும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கு ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட வாராந்திர அளவிலான எரிபொருள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு, அடுத்த மாதம் முதல் இந்த முறை செயல்பாட்டுக்கு வரும்.
இலங்கயின் நிலைமை சீராகும் வரை நீண்ட காலத்திற்கு இந்த முறை தொடரும். இலங்கை பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனம், ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்கிறது. ஆனால், சிலர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாக தேவையான எரிபொருளை பதுக்கி இருப்பு வைக்கின்றனர்.
இலங்கையில் நிலவும் இந்த பற்றாக்குறை நிலைமை, எரிபொருள் பதுக்கல் அதிகம் நடைபெற வழிவகுத்தது. எரிவாயு பற்றாக்குறையால் மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. 24 மணி நேர மின் விநியோகத்திற்காக, டீசலுக்கு மாதந்தோறும் 100 மில்லியன் டாலர் கூடுதல் செலவாகிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு 200 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மாதாந்திர எரிபொருள் கட்டணம் தற்போது 550 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
இலங்கையின் எரிபொருள் கொள்முதல் முற்றிலும் இந்தியாவை நம்பியே உள்ளது. இலங்கையின் குறைந்தபட்ச தினசரி டீசல் தேவை 5 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் உதவியை நம்பியே இருக்கிறோம். இதனை இலங்கையின் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.