இலங்கை அதிபர் அலுவலகம் இன்று மீண்டும் திறப்பு!!
இலங்கை அதிபர் அலுவலகம் இன்று மீண்டும் திறப்பு!!

இலங்கை அதிபர் அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, அலுவலகம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியால் ஆத்திரம் அடைந்த மக்கள் கடந்த 9ஆம் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடி அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தனர்.
பின்னர் அந்த கட்டிடங்களில் இருந்து படிப்படியாக அவர்கள் வெளியேறினர். அதேநேரம் அதிபர் அலுவலகத்தை ஆக்கிரமித்திருந்த போராட்டக்காரர்களில் ஒரு சிலர் தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால் அவர்களை ராணுவம் சமீபத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
அலுவலகம் அருகே போடப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரமும் பிரித்து எறியப்பட்டன. இதனால் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சுமார் 50 பேர் காயமடைந்தனர். 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது உலக நாடுகளின் கண்டனத்தை பெற்றது. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் கவலையையும், கண்டனத்தையும் வெளியிட்டிருந்தன. ஆனால் இதை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நிராகரித்தார். போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அதிபர் அலுவலகத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அத்துடன் அங்கு சேதமடைந்த பொருட்களின் விவரங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.
இதைத்தொடர்ந்து அதிபர் அலுவலகம் இன்று மீண்டும் செயல்பாட்டுக்கு திறக்கப்படுகிறது. இதைப்போல போராட்டக்காரர்கள் வசம் சென்ற பிற அலுவலக கட்டிடங்களையும் சுமுக செயல்பாட்டுக்கு கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
newstm.in