ஸ்டிரைக்… இன்று தமிழகத்தில் பேருந்துகள் இயங்குமா?
ஸ்டிரைக்… இன்று தமிழகத்தில் பேருந்துகள் இயங்குமா?

இன்றும், நாளையும் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என திமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து திட்டமிட்டபடி இன்றும் மற்றும் நாளையும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தொழிலாளர்களின் சம்பளத்தை இழந்தாலும் பரவாயில்லை, கட்டாயம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

போராட்டத்தில் 9க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் தினந்தோறும் இயக்கப்படும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்களாக இருக்கும் INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF மற்றும் UTUC ஆகியவை கடந்த 22ஆம் தேதி டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தின. இதில் வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
மத்தியில் ஆளும் பாஜகவின் தொழிற் சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கத்தை (பி.எம்.எஸ்)தவிர்த்து மற்ற பெரும்பாலான தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளன.

மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுதல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை கைவிடுமாறு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெறுகிறது.
newstm.in

