மாணவர்கள் இந்த ஆடை அணியக் கூடாது.. அரசு புதிய கட்டுப்பாடு..!
மாணவர்கள் இந்த ஆடை அணியக் கூடாது.. அரசு புதிய கட்டுப்பாடு..!

உடுப்பியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள், சீருடைக்கு மேல் பர்தா உடை அணிந்து வருகிறார்கள். இதற்கு அந்த பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஆனாலும் அந்த மாணவிகள் பர்தா அணிந்து வருவதை நிறுத்தவில்லை. பர்தா அணிந்து வந்தால் பள்ளியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த பள்ளி கூறியுள்ளது.
அந்த மாணவிகள், தாங்கள் பர்தா அணிந்தே பள்ளிக்கு வருவோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்கு சவால் விடும் வகையில், இந்து மாணவர்கள் 100 பேர் காவி துண்டு போட்டு பள்ளிக்கு வந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், மாணவிகள் பர்தா அணிந்து வகுப்புக்கு வரக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த பிரச்னை தீராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. உடுப்பியில் நேற்று, பர்தா அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக காவல்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “கல்வி கூடங்களில் சர்ச்சைக்கு இடம் தரக்கூடாது. மத விஷயங்கள் விசாலமான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் சீருடை தான் முக்கியம். அங்கு மற்ற உடைகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. அதாவது, மாணவர்கள் மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஆடைகளை அணியக்கூடாது. கல்விக் கூடங்களில் சாதி, மதத்தை தாண்டி அனைவரும் ஒன்றே என்ற மனநிலை அனைவருக்கும் இருக்க வேண்டும்.
அனைவரும் பாரத மாதாவின் குழந்தைகள் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். பூஜைகள், பிரார்த்தனைகள் கோவில்கள், மசூதிகளில் வைத்துக்கொள்ள வேண்டும். கல்விக் கூடங்களில் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு குறித்து பேச வேண்டும்” என்று அரக ஞானேந்திரா கூறினார்.

