அண்ணாமலை மீது திடீர் வழக்குப்பதிவு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!
அண்ணாமலை மீது திடீர் வழக்குப்பதிவு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று காலை ஏராளமான பாஜகவினர் திரண்டனர். அண்ணாமலை தலைமையில் அங்கு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக புறப்பட்ட பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அண்ணாமலையுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கட்சியினர் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாஜகவின் மக்கள் போராட்டத்திற்கு மகத்தான ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கும், கட்சியின் நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி, மக்களுக்கான இந்தப் பயணம் தொய்வின்றி தொடரும்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக போராட்டம் நடைபெறும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வரை இந்தப் போராட்டம் நிற்காது’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 5000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

