ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் சக்கரபாணி ..!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் சக்கரபாணி ..!

தமிழக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று உயிரிழந்த பிறகும் குடும்ப அட்டையில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் புதிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நிலையில், இந்தக் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் துறையில், முதல்வர் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் ரூ.2,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 35.35 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ரேஷனில் ஒரு கிலோ சர்க்கரையும், ஒரு கிலோ உளுத்தம் பருப்பும் கூடுதலாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் முதல்வர் தெரிவித்து இருந்தார். அதன்படி, ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து ஆகியவை விரைவில் வழங்கப்படும்.
மேலும், நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. எனவே, கருவிழி மூலம் அடையாளம் காணும் முறை விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார்.

