தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை – சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு!!
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை – சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு!!

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சிபிஐ 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பள்ளியில் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழக பாஜக இந்த குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டங்களை நடத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரைக்கிளை உயர்நீதிமன்றம், சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றியதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த நிலையில் மாணவி தற்கொலை வழக்குத் தொடர்பாக விடுதி வார்டன் சகாயமேரி மீது சிபிஐ நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 305- குழந்தைகளை தற்கொலை செய்ய தூண்டுதல், 511- குற்றம் செய்ய முயற்சித்தல் மற்றும் சிறார் நீதி சட்டப்பிரிவுகளான 75, 82(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சென்னை சிபிஐ டிஎஸ்பி ரவி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளார். சிபிஐ டி.எஸ்.பி ரவி தலைமையில் விசாரணை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதி வார்டன் சகாயமேரி ஜாமீனில் வெளியே வந்தார். சகாயமேரியிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
newstm.in

