ஆசிரியர்களே, இனி எல்லாமே ‘ஆப்’தான்.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
ஆசிரியர்களே, இனி எல்லாமே ‘ஆப்’தான்.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

பள்ளி ஆசிரியர்கள் இனி விடுப்பு, பர்மிஷன், தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு ஆகியவற்றுக்கான அனுமதியை செயலி மூலமே பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வி ஆணையர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
‘தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசு / அரசு உதவி பெறும் / தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப் பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாகச் சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர்.
நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்கு சிரமங்களும் கால விரையமும் ஏற்படுகிறது. எனவே, இவ்வாறான சிரமங்கள் மற்றும் கால விரையத்தினை தவிர்க்கும் பொருட்டு, 25.05.2022 அன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் ஆசிரியர்கள் அவர்தம் கைபேசி வாயிலாக தற்டுசயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் செயலி (இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான செயலி) ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 2022- 2023-ம் கல்வியாண்டிலிருந்து இந்த செயலி பயன்படுத்துவது குறித்த விளக்கம் தரப்பட்டுள்ளது.
எனவே ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் இச்செயலி மூலம் தங்கள் பணி சார்ந்த தேவைகள் / விடுப்புகளுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

