மீண்டும் பதற்றம்.. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் வெட்டிக்கொலை !!
மீண்டும் பதற்றம்.. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் வெட்டிக்கொலை !!

உணவு டெலிவரி ஊழியரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 3ஆவது தெருவை சேர்ந்தவர் அஜித்குமார்(24). இவர் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்து விட்டு நடுக்குப்பம் 7ஆவது தெருவில் தனது நண்பர்களுடன் அஜித் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் திடீரென தாங்கள் மறைத்துவைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்தனர். மேலும், அந்த கும்பல் கத்தியால் அஜித்தை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர்.

அஜித், அவர்களிடம் இருந்து தப்பியோட முயற்சிப்பதற்குள் அக்கும்பல் வெட்டி சாய்த்தது. இதில் ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்து விழுந்த அஜித்தை அருகிலிருந்த நபர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அஜித் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டுள்ள அஜித் மீது ஜாம்பஜார், ராயப்பேட்டை, மெரினா உட்பட பல காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு பிரச்னையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

