கள்ளக்குறிச்சியில் பதற்றம் – போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல்!!
கள்ளக்குறிச்சியில் பதற்றம் – போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல்!!

மாணவி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு கள்ளக்குறிச்சியில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி (17) என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 13ஆந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 5ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி - சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகின்றது. இதனால் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
newstm.in

