கள்ளக்குறிச்சியில் நடந்த கொடூரம்..!! கந்துவட்டிக் கொடுமையால் பாஜக பிரமுகர் தற்கொலை!!
கள்ளக்குறிச்சியில் நடந்த கொடூரம்..!! கந்துவட்டிக் கொடுமையால் பாஜக பிரமுகர் தற்கொலை!!

கள்ளக்குறிச்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்பவரின் மகன் தினேஷ் (21). தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், பாஜக நகர இளைஞரணி துணைத் தலைவராக உள்ளார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த தினேஷ் தனது தாய் சித்ரா, தங்கையுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவசரத் தேவைக்காக வேல்முருகன் என்பவரிடம் ரூ. 10 ஆயிரம் வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளார். வட்டியோடு முதல் தொகையை தினேஷ் செலுத்தியும், மேற்கொண்டு பணம் கேட்டு வேல்முருகன் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.
தினேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு தென்கீரனூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே விஷம் குடித்துவிட்டு தனது செல்போனில் தான் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் குறித்து உருக்கமான வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்து முகநூல் மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் பிணமாக மிதந்த தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தினேசின் தாய் சித்ரா கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தற்கொலை செய்து கொண்ட தினேஷ் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கந்துவட்டிக் கொடுமையால் காவல்துறையைச் சேர்ந்த செல்வக்குமார் உள்பட பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் கந்துவட்டியை ஒழிக்க கந்துவட்டி ஆபரேஷன் என்ற திட்டத்தை காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அறிவித்தார். ஆனால், அதனையும் மீறி தமிழகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் தினேஷ் தற்கொலை நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

