மாஸ்க் அணியச் சொன்ன அதிகாரியை தாக்கிய கடைக்காரர்!!
மாஸ்க் அணியச் சொன்ன அதிகாரியை தாக்கிய கடைக்காரர்!!

சென்னை மயிலாப்பூர் பஜார் சாலை பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகளில் முகக்கவசம் அணிவதை மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதே பகுதியில் இயங்கி வந்த சாந்தா கோல்டு ஹவுஸ் என்ற நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள், உரிமையாளர், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர்.
இதனை பார்த்த மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நகைக்கடையில் உடலின் வெப்பநிலையை அளவிடும் கருவியும் இல்லை.
அதே போல வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்கப்படாததும் தெரிய வந்ததால் கொரோனா விதிகளை கடைபிடிக்குமாறு கடை உரிமையாளர் சந்தோஷ் குமாரிடம் தெரிவித்து அபராதம் விதிக்க அதிகாரிகள் முற்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் சந்தோஷ்குமார் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாததில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே கடை உரிமையாளர் சந்தோஷ்குமார் மாநகராட்சி சுகாதாரத்துறை உதவி ஆய்வாளர் முரளியின் சட்டையை பிடித்து தாக்கினார்.
கடையின் உரிமையாளர் சந்தோஷ்குமார் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி முரளியை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் சந்தோஷ் குமார் மீது புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் மைலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாநகராட்சி அதிகாரிகள் வந்து கடையை சோதனை செய்தபோது கடையின் உரிமம் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்திருந்ததும், உரிமம் புதுபிக்காமல் கடையை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனால் மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு காலவரையறையின்றி சீல் வைத்து சென்றனர். மேலும் மைலாப்பூர் போலீசார் கடையின் உரிமையாரான சந்தோஷ்குமாரை அதிகாரியை தாக்கிய வழக்கில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

