தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்... இறுதியில் நடந்த சோகம்!!
தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்... இறுதியில் நடந்த சோகம்!!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியை சேர்ந்த ரோசி (66) என்பவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இவர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒரு நாள் கூட விடுமுறை போடாமல் வேலை செய்து வந்தார்.
இதனை பாராட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரோசியை இரண்டு முறை கவுரவித்துள்ளார். வேலைக்கு செல்லும் இடங்களில் உடன் பணி புரிபவர்கள் நீ இறந்தால் உன்னை யார் அடக்கம் செய்வது என்று கேட்டு கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரோசி தான் இறந்தால் தன்னை அடக்கம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தான் வேலை செய்து சம்பாதித்து வைத்திருந்த ஐம்பதாயிரம் ருபாய் பணத்தில் தனக்கென்று ஒரு அழகான கல்லறையை கட்டி வைத்திருந்தார்.

அந்த கல்லறையின் பின்புறத்தில் ஒரு வாயில் வைத்து அதன் வழியாக உடலை உள்ளே தள்ளி அடக்கம் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ரோஷிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
கவனிக்க யாரும் இல்லாததால் வீட்டிலேயே இறந்து கிடந்துள்ளார். ரோஷியை காணவில்லை என்பதால் சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் வீட்டினுள் சென்று பார்த்தார்.

அப்போது உடல் அழுகிய நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரோஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கேலி கிண்டல்களால் மனம் நொந்து தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

