இவர்களின் மதிப்பு களங்கம் அடைந்துள்ளது.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை..!
இவர்களின் மதிப்பு களங்கம் அடைந்துள்ளது.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை..!

மத்திய புலனாய்வு அமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: “சிபிஐ, அதன் நடவடிக்கைகள் மற்றும் செயலற்ற தன்மைகள் மூலம் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை அடிக்கடி ஏற்படுத்தி வருகிறது.
மக்கள் தங்களின் இக்கட்டான நேரத்திலும் காவல்துறையை அணுகத் தயங்குகின்றனர். ஊழல், காவல்துறையின் அத்துமீறல், பாரபட்சமின்மை மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு ஆகியவற்றால் போலீசாரின் நன்மதிப்பு களங்கம் அடைந்துள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அடிக்கடி போலீஸ் அதிகாரிகள் துன்புறுத்தப்படுவதாக போலீசாரே நீதிமன்றத்தை அணுகுவது தொடர் நிகழ்வாகி வருகிறது.
ஆட்சியில் இருப்பவர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெறும் நோக்கத்தில் செயல்படும் போலீசார், அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் சந்தித்துதான் ஆக வேண்டும். அரசியல்வாதிகளின் அழுத்தங்களில் இருந்து காவல்துறை விலக வேண்டியது அவசியம்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சிபிஐ அமைப்பு மீதும் இருக்கிறது. சிபிஐ போன்ற அமைப்புகள் சுதந்திரமான அமைப்பின் கீழ் வரவேண்டும்.
அரசியல்வாதிகளுடனான தொடர்பை சிபிஐ-யும், காவல்துறையும் முறித்துக் கொண்டு, தங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும், சமூக நன் மதிப்பையும் மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
போலீசார் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு போதிய கவனம் செலுத்தப்படுவது அந்த அமைப்புகள் அரசியல் தலையீடுகளின்றி சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன. ஆனால், கவனம் செலுத்தப்படவில்லை.
காவல்துறை, விசாரணை அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி வலுப்படுத்துவது அவசியம்” என்று நீதிபதி என்.வி. ரமணா கூறினார்.

