சோகம்.. கட்டுப்பாட்டை இழந்த தேர்.. திருவிழாவில் இருவர் பலி..!
சோகம்.. கட்டுப்பாட்டை இழந்த தேர்.. திருவிழாவில் இருவர் பலி..!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட் என்ற இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பார்வதாம்பா எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஒரு கட்டத்தில், பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த தேர் அதிவேகமாக கூட்டத்திற்குள் சென்றது. இதில், தேரின் சக்கரம் ஏறியதில் ஒருவரும், கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பக்தர்கள் அதிகளவில் கூடி வடத்தை பிடித்து இழுத்ததால் தேர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த தொகுதி எம்எல்ஏ நிரஞ்சன் குமார் அரசு மருத்துவமனைக்கு சென்று, தேர் சக்கரத்தில் சிக்கி பலியான சர்பபூஷன் மற்றும் நெரிசலில் சிக்கி பலியான சுவாமி ஆகியோரின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Next Story

