செல்ஃபியால் ஏற்பட்ட சோகம்.. புதுமண தம்பதி உட்பட 3 பேர் பலி..!
செல்ஃபியால் ஏற்பட்ட சோகம்.. புதுமண தம்பதி உட்பட 3 பேர் பலி..!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்திக் பதான் சேக் (22). இவருக்கும், தாகா சேக் (20) என்ற பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில், புதுமண தம்பதி, நண்பர் சாகாப் என்பவருடன் காவத் கிராமத்தில் உள்ள ஆற்றுக்கு சென்றனர். அங்கு, ஆற்றின் அருகில் நின்று அவர்கள் செல்ஃபி எடுக்க முயன்றனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக புதுமண தம்பதி ஆற்றில் விழுந்தனர். அவர்களை காப்பாற்ற நண்பர் சாகாப்பும் ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் 3 பேரின் உடல்களையும் ஆற்றில் இருந்து மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து வாத்வானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்ஃபி எடுக்க முயன்ற போது புதுமண தம்பதி, நண்பர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

