மதுரையில் சோகம்.. தம்பதி உயிரை பறித்தது பங்குச் சந்தை முதலீடு..!
மதுரையில் சோகம்.. தம்பதி உயிரை பறித்தது பங்குச் சந்தை முதலீடு..!

மதுரை மாநகர் பழைய குயவர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன்; இவருடைய மனைவி லாவண்யா. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாகராஜன், பங்குச் சந்தை ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் இருந்து வந்துள்ளார்.
நாகராஜன், பங்குச் சந்தையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்த நிலையில், திடீரென பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக இவரின் முதலீட்டில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த நாகராஜன், தனது குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தனது மனைவி லாவண்யாவுடன் நேற்று மதியம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
வெகு நேரமாக வீட்டின் கதவு கதவு திறக்காத நிலையில், அருகில் உள்ளவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நேரில் சென்று பார்த்தபோது இருவரும் தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, இருவரின் உடலையும் மீட்ட தெப்பக்குளம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பங்குச்சந்தை முதலீடா, பிட்காயின் ஆன்லைன் முதலீடு போன்ற ஏதேனும் மூலமாக பணத்தை இழந்துள்ளாரா என்ற கோணத்தில், அவரது வீட்டில் உள்ள லேப்டாப், செல்போன், பென் டிரைவ்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

