ரயில்வே கேட்டில் சோகம்.. புறநகர் ரயில் மோதல்.. தூக்கி வீசப்பட்ட பெண் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலி..!
ரயில்வே கேட்டில் சோகம்.. புறநகர் ரயில் மோதல்.. தூக்கி வீசப்பட்ட பெண் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலி..!

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மனைவி திவ்யா(34). இவர், திருவள்ளூரில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, புட்லூரில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்றார்.

அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற புறநகர் ரயில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திவ்யா, எதிரே வந்த பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பலியான திவ்யாவின் சிதறிக்கிடந்த உடல் உறுப்புகளை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

