இலங்கைக்கு துணை நிற்போம்.. சென்னை விழாவில் பிரதமர் பேச்சு..!
இலங்கைக்கு துணை நிற்போம்.. சென்னை விழாவில் பிரதமர் பேச்சு..!

சென்னையில் நேற்று (26-ம் தேதி) மாலை நடைபெற்ற அரசு விழாவில், 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அத்துடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், “இலங்கை இப்போது கடினமான காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. அங்கே உள்ள நடப்பு நிலை உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும்.
நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறோம். குறிப்பாக, நிதியுதவி, எரிபொருள், உணவு, மருத்துவம் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மத்திய அரசு அளித்து வருகிறது.
பல இந்திய தன்னார்வ அமைப்புகளும், தனிநபர்களும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள், மலையகத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இலங்கைக்கு பொருளாதார ஆதரவுகளை அளிப்பது தொடர்பாக சர்வதேச மன்றங்களில் உரக்கப் பேசி வருகிறோம். ஜனநாயக உறுதித்தன்மை மேலோங்கவும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும்.
இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு முதல் முறையாக சென்ற இந்திய பிரதமர் நான்தான். அங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி, கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன” என்றார்.