அடுத்த குடியரசுத் தலைவர் யார்? குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு!!
அடுத்த குடியரசுத் தலைவர் யார்? குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் விக்யான் பவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவியேற்றுக் கொள்வார். மாநிலங்களவை தலைமைச் செயலாளர் பிரமோத் சந்திரமோடி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆக உள்ளது. 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவைகளில் உள்ள 4,033 எம்எல்ஏக்கள் என ஒட்டுமொத்தமாக 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் நடைபெறும். குடியரசுத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். அதே வேளையில் நியமன உறுப்பினர்கள், எம்எல்சி-க்கள் வாக்களிக்க முடியாது.

