வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் புறக்கணிப்பு ஏன்?
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் புறக்கணிப்பு ஏன்?

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் இன்று ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
மக்களவையின் இன்றைய அலுவல்களை ஒத்திவைத்து, தமிழ் புறக்கணிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இது குறித்த நோட்டீஸில் தெரிவித்திருப்பதாவது, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளின் பல்வேறு இருக்கைகளில் பேராசிரியர் பணியிடங்களுக்கான விளம்பரத்தை ஐசிசிஆர் வெளியிட்டுள்ளது.
ஆனால், போலந்து பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளுக்கு விண்ணப்பிக்க அதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. போலந்து நாட்டில் இருக்கும் தமிழ் இருக்கைகளுக்கான பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இது தெளிவான பாரபட்சத்தைக் காட்டுகிறது. இந்தப் பிரச்சனையை விவாதிக்க அவையின் அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் மத்திய அரசு தரப்பில் திணறி வருகிறது. இந்த நிலையில் தமிழ் புறக்கணிப்பு குறித்து விவாதிக்க நேரம் கேட்டுள்ளதால் சபாநாயகர் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் ஐசிசிஆர் நிறுவனத்தில், 1970-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய பேராசிரியர்களுக்கான வருகை தரு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐசிசிஆர் மூலம் தேர்வாகும் இவர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசு வழங்கும். உணவு மற்றும் தங்குமிடங்களை சம்பந்தப்பட்ட நாடுகளின் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
சம்ஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்த மதம், இந்தியக் கல்வி என சுமார் 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்கைகள் உள்ளன. வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இருக்கைகள் இருந்தன. ஆனால், 2014-ம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாகக் குறைந்து தற்போது 51 இருக்கைகள் மட்டுமே உள்ளன. அதிகபட்சமாக இந்தி, அடுத்த நிலையில், சம்ஸ்கிருதமும் உள்ளன.
இந்தப் பட்டியலில் தமிழுக்காக வெறும் 2 இருக்கைகள், போலந்து நாட்டில் உள்ளன. போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகத்திலும், கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக்கழகத்திலும் இவை அமைந்துள்ளன. இவற்றுக்கு, கடந்த 2014 முதல் பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. கடந்த 2015-ல் கேரள பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் ஜெய கிருஷ்ணனை ஐசிசிஆர் தேர்வு செய்தது. ஆனால் அவரையும் போலந்து அனுப்பவில்லை. தற்போது ஐசிசிஆர் சார்பில் வெளியிடப்பட்ட இருக்கைகளுக்கான விளம்பரத்தில் தமிழ் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதற்காக விண்ணப்பிக்கும் ஐசிசிஆர் இணையதளத்தில் தமிழ் இடம்பெறவில்லை.
newstm.in