அதிரடி அறிவிப்பு… கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கடன்..!
அதிரடி அறிவிப்பு… கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கடன்..!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க ஆரம்பித்த பிறகு, மக்களின் மருத்துவச் செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மற்ற செலவுகளுடன் சேர்த்து, மருத்துவமனை செலவுகளுக்கும் கடன் வாங்கி செலவு செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைப்பது அரிதாக இருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் வசூல் செய்கின்றனர். இதனால், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை செய்ய முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற சூழலில் கொரோனா சிகிச்சைக்காக வங்கிகள் சிறப்புக் கடன் திட்டங்களை அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் ரூ.5 லட்சம் வரையில் தனிநபர் கடன் வழங்கும் சிறப்பு திட்டங்களை அறிவித்தது. இதன் மூலம், கொரோனா தொடர்பான சிகிச்சைகளுக்கு செலவு செய்யலாம். இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தனக்காகவும் தனது குடும்பத்தினருக்காகவும் கடன் பெற்று அதை வைத்து சிகிச்சை செலவுகளைப் பார்த்துக்கொள்ளலாம். கொரோனா இரண்டாம் அலை தொடங்கியபோது மத்திய ரிசர்வ் வங்கி இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
சம்பளம் பெறும் நபர்களுக்கு 6.85 சதவீதத்தில் தொடங்கி கடன் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தது ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையில் கடன் பெறலாம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எஸ்பிஐ கவாச் என்ற பெயரில் 8.5 சதவீத வட்டியில் ரூ.5 லட்சம் வரையில் கடன் வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 8.5 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரையில் கடன் கொடுக்கிறது. பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகள் கொரோனா சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வரையில் கடன் வழங்குகின்றன.

