வாக்களிக்காமல் சில நிமிடங்கள் அப்படியே நின்ற நடிகர் விஜய்.. ஏன் தெரியுமா?
வாக்களிக்காமல் சில நிமிடங்கள் அப்படியே நின்ற நடிகர் விஜய்.. ஏன் தெரியுமா?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் வாக்களிப்பதற்காக காலை 7 மணிக்கு தனது வீட்டில் இருந்து கிளம்புவார் என அவரது மக்கள் தொடர்பாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே காலை 5 மணியிலிருந்தே அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். போலீஸாரும் காலை முதலே விஜய் வீட்டின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சட்டமன்றத் தேர்தலின் போது விஜய் கருப்பு சிவப்பு நிற சைக்கிளில் வந்து வாக்களித்தார். இந்த முறை, காலை 7.05 மணிக்கு அவர் தனது சிவப்பு நிற காரில் கிளம்பினார். தனது வீட்டின் பின்புறம் உள்ள நீலாங்கரை வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பள்ளியில் 192ஆவது வார்டில் விஜய் வாக்கு செலுத்தச் சென்றார்.

அவரது காரை இரு சக்கர வாகனங்களில் அவரது ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றனர். ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்பி எடுக்க முயன்றனர். ஒரு சில ரசிகர்களுடன் அவர் செல்ஃபி எடுத்துக் கொண்டார். பின்னர் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றார்.
அடையாள அட்டை சரிபார்ப்பு முடிந்த பின்னர் விஜய் கையில் மை வைக்கப்பட்டது. அதன் பின்னர் விஜய் வாக்கு செலுத்தும் இடத்துக்கு வந்தார். அப்போது அவரை சுற்றி ஒளிப்பதிவாளர்கள் கூட்டம் முண்டியடித்தது. இதனால் தான் யாருக்கு வாக்கு அளிக்கிறோம் என்பது கேமராவில் பதிவாகிவிடும் என்பதற்காக அவர் சிறிது நேரம் வாக்களிக்காமல் நின்றார். சுற்றியிருந்தவர்களை நகர்ந்து செல்லுமாறு கையசைத்துக் கொண்டே நின்றிருந்தார். இதனால் அவர் வாக்களிப்பதில் சில நிமிடங்கள் காலதாமதம் ஏற்பட்டது.

பின்னர் சுற்றியிருந்தவர்களை காவல்துறையினர் பின்செல்லும் வகையில் ஏற்பாடு செய்தனர். இதனால் அவர்கள் விலகிய பின்னரே விஜய் வாக்களித்துவிட்டு தனது வீட்டுக்கு கிளம்பினார்.
newstm.in

