மதுரை எய்ம்சில் 50 மாணவர்கள் சேர்க்கை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!
மதுரை எய்ம்சில் 50 மாணவர்கள் சேர்க்கை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிங்காரவேலரின் உருவப்படத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; “தொழிலாளர்கள் நலனுக்காக தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர் சிங்காரவேலர். பல முறை சிறை சென்றவர். சுயமரியாதை, சமத்துவம் போன்றவற்றில் முழு ஈடுபாடு உடையவர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு அளித்த ஒப்புதல் அடிப்படையில் மதுரை எய்ம்ஸில் 50 மாணவருக்கான சேர்க்கை நடந்து வருகிறது. மதுரை எய்ம்ஸில் இடம் கிடைக்கும் 50 மாணவர்களும் ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் பட்சத்தில், படிப்படியாக பரிசோதனைகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதாவது அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறித்தியுள்ளோம்” என்று அவர் கூறினார்.

