எம்ஜிஆரை துரோகி என்று அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு அதிமுக தலைமை கண்டனம் ..!!

எம்ஜிஆரை துரோகி என்று அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு அதிமுக தலைமை கண்டனம் ..!!

எம்ஜிஆரை துரோகி என்று அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு அதிமுக தலைமை கண்டனம் ..!!
X

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. திமுக கூட்டணி நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். அப்போது, அமைச்சர் துரைமுருகன் எம்ஜிஆர், வைகோ எல்லாம் திமுகவில் இருந்து வெளியேறிய துரோகிகள் என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த 28.9.2021 அன்று திருப்பத்தூர்‌ மாவட்டம்‌, ஜோலார்பேட்டையில்‌ நடைபெற்ற திமுக நிர்வாகிகள்‌ கூட்டத்தில்‌ பேசிய திமுகவின்‌ பொதுச்‌ செயலாளரும்‌, மூத்த அமைச்சருமான திரு. துரைமுருகன்‌ அவர்கள்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக நிறுவனர்‌, ‘பாரத்‌ ரத்னா’ இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்களை நம்பிக்கை துரோகி என்று கூறி இருப்பது, சாத்தான்‌ வேதம்‌ ஒதுவது போல்‌ உள்ளது.

வரலாறு என்பது நின்று, நிலைத்து நிற்கும்‌ கல்வெட்டைப்‌ போன்றது. அப்படிப்பட்ட வாலாற்றுக்குச்‌ சொந்தமாக வேண்டும்‌ என நினைப்பவர்கள்‌ ஏராளம்‌. ஆனால்‌, வரலாறே ஒரு சிலரைத்‌ தான்‌ தனக்குச்‌ சொந்தமாக்கிக்‌ கொண்டது. அந்த ஒரு சிலரில்‌ ஒருவர்‌ தான்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌.

“என்னை அறியாமலேயே என்‌ மடியில்‌ சனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன்‌. அதன்‌ அருமை கருதி அதனை எடுத்து என்‌ இதயத்திலே வைத்துக்கொண்டேன்‌. அதுதான்‌ எம்‌.ஜி.ஆர்‌.” என்றும்‌. “நீ முகம்‌ காட்டினால்‌ முப்பது இலட்சம்‌ வாக்குகள்‌ நிச்சயம்‌” என்றும்‌, பேரறிஞர்‌ பெருந்தகை அண்ணா அவர்களால்‌ போற்றப்பட்டு, தன்னுடைய திரைப்படங்களின்‌ பாடல்கள்‌ வாயிலாக திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ வெற்றிக்கு வித்திட்ட புரட்சித்‌ தலைவரைப்‌ பார்த்து, பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ மறைவிற்குப்‌ பிறகு, அடுத்த நிலையில்‌ உள்ள அனுபவம்‌ மிக்கவர்‌ தமிழ்‌நாட்டின்‌ அடுத்த முதலமைச்சராக வருவார்‌ என்று எல்லோரும்‌ ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில்‌, திரு. மு.கருணாநிதி அவர்களை முதலமைச்சராக்கிய புரட்சித்‌ தலைவரைப்‌ பார்த்து ‘நம்பிக்கை துரோகி’ என்று திரு.துரைமுருகன் சொல்வது கடும்‌ கண்டனக்கிற்குரியது.

திரு. துரைமுருகன்‌, திமுக கடந்து வந்த பாதையை, தான்‌ கடந்து வந்த பாதையை மறந்துவிட்டுப்‌ பேசுகிறாரா அல்லது மறைத்துவிட்டுப்‌ பேசுகிறாரா என்று தெரியவில்லை. ‘நம்பிக்கைத்‌ துரோகம்‌’ என்று திரு. துரைமுருகன்‌ கூறியவுடன்‌ எங்கள்‌ நினைவிற்கு வருவது உண்ட வீட்டிற்கு இரண்டகம்‌ செய்வது’ என்ற பழமொழிதான்‌. “உணவு தந்த வீட்டிற்கு கேடு தரும்‌ செயலை நினையாமல்‌ இருக்க வேண்டும்‌. அவருக்கே கேடு செய்வது தான்‌ நம்பிக்கைத்‌ துரோகமாகும்‌.” இதைச்‌செய்தவர்கள்‌ யார்‌ என்பதை முதலில்‌ துரைமுருகன்‌ அவர்கள்‌ தெரிந்துகொள்ள வேண்டும்‌.

திமுக என்ற அரசியல்‌ கட்சி ஆட்சிப்‌ பீடத்தில்‌ அமருவதற்கும்‌, திரு. கருணாநிதி அவர்கள்‌ முதலமைச்சரானதற்கும்‌ காரணமான புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்களையே, கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு நீக்கிய திரு. கருணாநிதி அவர்கள்‌ தான்‌ நம்பிக்கைத்‌ துரோகி.

காவேரி நதிநீர்ப்‌ பிரச்சினையில்‌, உச்சநீதிமன்றத்தில்‌ இருந்த வழக்கினை சத்தம்‌ போடாமல்‌ திரும்பப்‌ பெற்றது, தமிழ்‌நாட்டு மக்களுக்கு, குறிப்பாக விவசாயப்‌ பெருங்குடி மக்களுக்கு கருணாநிதி செய்த மிகப்‌ பெரிய துரோகம்‌.

கச்சத்‌தீவை தாரை வார்த்தது, தமிழ்‌நாட்டில்‌ உள்ள மீனவ மக்களுக்கு செய்த துரோகம்‌. இலங்கையில்‌ போர்‌ நின்றுவிட்டது என்று கூறி இலங்கைத்‌ தமிழர்கள்‌ கொத்துக்‌ கொத்தாக கொல்லப்பட காரணமாக இருந்தது, இலங்கைத்‌ தமிழர்களுக்குச்‌ செய்த துரோகம்‌.

நீட்‌ தேர்வுக்கு வித்திட்டது ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு செய்த துரோகம்‌. ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு தடை விதித்த ஒன்றிய அரசிற்கு துணையாக இருந்தது, பாரம்பரிய விளையாட்டு வீரர்களுக்கு செய்ததுரோகம்‌. சில்லறை வர்த்தகத்தில்‌ அன்னிய முதலீடு என்ற கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்தது, வணிகர்களுக்கு செய்த துரோகம்‌.

‘கழகமே குடும்பம்‌’ என்றிருந்த திமுகவை, “குடும்பமே கழகம்‌” என்று மாற்றியது திமுகவினருக்கு செய்த மிகப்‌ பெரிய துரோகம்‌.

இப்படி, எண்ணற்ற துரோகங்களைச்‌ செய்தவர்‌ தான்‌ மறைந்த திமுக தலைவர்‌ திரு. கருணாநிதி. அவர்‌ மறைவிற்குப்‌ பின்‌ அந்தப்‌ பணியை திரு. துரைமுருகன்‌ எடுத்துக்‌ கொண்டிருக்கிறார்‌ போலும்‌! அதனால்‌ தான்‌, தன்னை வளர்த்து ஆளாக்கிய புரட்சித்‌ தலைவரையே நம்பிக்கைத்‌ துரோகி என்று சொல்லி இருக்கிறார்‌. திரு. துரைமுருகனின்‌ இந்தப்‌ பேச்சு நம்பிக்கைத்‌ துரோகத்தின்‌ உச்சக்‌ கட்டம்‌.

புரட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ எந்தக்‌ காலத்திலும்‌ யாருக்கும்‌ துரோகம்‌ செய்ததில்லை. துரோகம்‌ செய்ய வேண்டிய அவசியமும்‌ அவருக்கு இல்லை. ஏனென்றால்‌, அவர்‌ மக்கள்‌ செல்வாக்கு படைத்தவர்‌; மக்களின்‌ நம்பிக்கையைப்‌ பெற்றவர்‌. புரட்சித்‌ தலைவரை நம்பி வாழ்ந்தவர்கள்‌ உண்டு, ஆனால்‌ அவர்‌ எந்த ஒரு தனி நபரையும்‌ நம்பி வாழவில்லை. அவரிடம்‌ உள்ள மிகப்‌ பெரிய சக்தி மக்கள்‌ சக்தி. அவருக்குத்‌ துரோகம்‌ செய்தவர்கள்‌ காணாமல்‌ போன வரலாறு உண்டு என்பது திரு. துரைமுருகன்‌ அவர்களுக்கே நன்கு தெரியும்‌. இருந்தாலும்‌ அவருக்கு நாங்கள்‌ சுட்டிக்காட்ட விரும்புகிறோம்‌.

புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்களை இழிவுபடுத்தும்‌ வகையில்‌ பேசும்‌ திரு. துரைமுருகனின்‌ இந்தப்‌ பேச்சு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “துரோகம்‌ கத்தியைப்‌ போன்றது. மற்றவர்களைக்‌ குத்தும்போது சுகமாக இருக்கும்‌. நம்மை திரும்பிக்‌ குத்தும்போது கொடூரமாக இருக்கும்‌” என்பதை திரு. துரைமுருகன்‌ உணர்ந்து செயல்பட வேண்டும்‌ என்பதே தமிழக மக்களின்‌ எதிர்பார்ப்பாக உள்ளது.

எப்படிப்பட்ட பாவத்தைச்‌ செய்தவர்க்கும்‌ அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய்‌ நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம்‌ இல்லை” என்ற திருவள்ளுவரின்‌ வாக்கினை மனதில்‌ நிலை நிறுத்தி, இனி வரும்‌ காலங்களில்‌ நாவடக்கத்துடன்‌ பேச வேண்டும்‌, எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:
Next Story
Share it