மக்களே கவனம்.. மாநிலம் தாண்டியது தக்காளி காய்ச்சல்.. 10 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதி..!
மக்களே கவனம்.. மாநிலம் தாண்டியது தக்காளி காய்ச்சல்.. 10 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதி..!

கேரள மாநிலத்தின் சில பகுதிகளில், குழந்தைகளை மட்டுமே குறிவைத்து தாக்கும் ‘தக்காளி காய்ச்சல்’ எனப்படும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளுக்கு தொண்டையில் கடுமையான வலி ஏற்படும்.
அத்துடன், உணவு அருந்தும்போது விழுங்க சிரமம் ஏற்படும். சருமத்திலும், தாடையிலும் தக்காளி நிறத்தில் சிறு சிறு திட்டுகள் வரும். இதுதான் இந்த தொற்றுக்கான அறிகுறியாகும். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவும் தன்மை கொண்டது.
கேரளாவில் இருந்து கோவை வரும் பயணிகளுக்கு இரு மாநில எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் தக்காளி காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை மாநகரில் சில பகுதிகளில் தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் குழந்தைகள் சிலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ‘தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 10 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக தனிமைப்படுத்தும் மையங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. 7 நாட்களில் இது சரியாகிவிடும். அறிகுறிகள் தென்பட்டவுடன் வெந்நீர் அருந்த வேண்டும்.
ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். காய்ச்சல் பாதிப்பை உணர்ந்தால் மருத்துவர்களை நாட வேண்டும்’ என்று அவர்கள் கூறினர்.
கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறும்போது, “தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. அப்படி வருபவர்கள் குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்.

