ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை!
சவாரி ஏற்றுவதில் தகராறு.. ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை..!

திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த பாஸ்கர், பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதே ஆட்டோ ஸ்டாண்டில் பொன்னுசாமி நகரை சேர்ந்த ஆனந்தன் என்பவரும் ஆட்டோ ஓட்டி வந்தார். ஆட்டோவில் சவாரி ஏற்றுவதில் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாஸ்கரை, அடியாட்களை வைத்து ஆனந்தன் தாக்கியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பாஸ்கர் பதிலுக்கு ஆனந்தனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். பாஸ்கரை, அங்கிருந்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்கள் மீதும் அரிவாள் கொண்டு தாக்க முயன்ற பாஸ்கர், அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த ஆனந்தன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்ட சக ஆட்டோ ஓட்டுநர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தன் உயிரிழந்தார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அதன் அடிப்படையில் கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in


