ஜூலை 1 முதல் SBI-ல் பெரிய மாற்றம் !!
ஜூலை 1 முதல் SBI-ல் பெரிய மாற்றம் !!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்குப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, எஸ்பிஐ அடிப்படை சேமிப்புக் கணக்கில் பல புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதன் படி ஜூலை 1ஆம் தேதி முதல், எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய சேவை கட்டணங்கள் நடைமுறைக்கு வரும். ஏடிஎம்மில் பணம் எடுப்பது, செக் புக் சேவைகள், பணம் அனுப்புவது போன்றவைகளுக்கு புதிய கட்டண விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன.
எஸ்பிஐ அடிப்படை சேமிப்புக் கணக்கு திறப்பதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது கே.ஒய்.சி ஆவணங்களை வழங்க வேண்டும். இந்த சேமிப்பு கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை பூஜ்ஜியமாக கணக்கில் கொள்ளப்படும். அடிப்படை சேமிப்புக் கணக்குதாரர்களுக்கு ரூபே ஏடிஎம் கார்டு வழங்கப்படும்.வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் இல்லை. அதேபோல் இந்த கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என்றாலும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கணக்கு வைத்திருப்போருக்கு அதிகபட்ச வரம்பு ஏதும் கிடையாது.
வாடிக்கையாளர் ஒருவர் ஒரு மாதத்தில் தனது அடிப்படை சேமிப்புக் கணக்கில் 4 முறை இலவசமாகப் பணத்தை எடுக்கலாம். அதைத் தாண்டி எடுத்தால் பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூ.15 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
காசோலையைப் பொறுத்தவரையில், எஸ்.பி.ஐ தனது BSBD வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிதியாண்டில் 10 செக் லீப்களை இலவசமாக வழங்குகிறது. அதன் பிறகு, 10 லீப் செக் புக்கிற்கு ரூ.40 மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். 25 லீப் செக் புக்கிற்கு ரூ .75 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். அவசரமாக செக்புக் தேவைப்படும் பட்சத்தில் 10 அல்லது அதன் ஒரு பகுதிக்கு ரூ .50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மூத்த குடிமக்கள் காசோலை புத்தகத்தில் புதிய சேவை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
எஸ்பிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி அல்லாத வங்கி கிளைகளில், இந்த அடிப்படை சேமிப்பு கணக்கினை வைத்திருப்பவர்கள், நிதி அல்லாத பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் எந்த கட்டணமும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது.

