பாஜகவில் இணைந்தார் பிபின் ராவத்தின் சகோதரர்.. மோடி போடும் தேர்தல் கணக்கு !
பாஜகவில் இணைந்தார் பிபின் ராவத்தின் சகோதரர்.. மோடி போடும் தேர்தல் கணக்கு !

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் தம்பியான ஓய்வு பெற்ற கர்னல் விஜய் ராவத் பாஜகவில் இணைந்தார்.
இந்திய முப்படைகளின் கூட்டுப் படைகளின் முதல் தலைமைத் தளபதியாக இருந்தவர் ஜெனரல் பிபின் ராவத். இவர் சமீபத்தில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இவருடன் மனைவி, பாதுகாப்பு வீரர்களும் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக பைலட்டுகள் செய்த தவறால் இந்த விபத்து நடந்ததாக விசாரணையிலும் தெரிய வந்தது.

இந்த நிலையில் பிபின் ராவத்தின் சகோதரரான ஓய்வு பெற்ற கர்னல் விஜய் ராவத் இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
பாஜகவில் சேர்ந்ததற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி மிகவும் புத்திசாலி. எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர் ஆவார். பாஜகவில் இணைவதற்காக நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது தந்தை பாஜகவில் இருந்தவர். அவருக்குப் பிறகு பாஜகவில் இணைந்து செயல்படும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது என்று விஜய் ராவத் கூறினார்.

முன்னதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமியை சந்தித்துப் பேசினார் விஜய் ராவத். அப்போதே அவர் பாஜகவில் இணைவது உறுதியானது. தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, அவர்கள் (பாஜக தலைமை) கேட்டுக் கொண்டால் மக்கள் சேவையாற்ற நான் தயார் என்று கூறினார் விஜய் ராவத். உத்தரகாண்ட் தேர்தலில் விஜய் ராவத் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
newstm.in

