பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? மத்திய அரசு விளக்கம் !
பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? மத்திய அரசு விளக்கம் !

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் பல மாநிலங்கள் ஊரடங்கு அறிவித்துள்ளன. அதேவேகத்தில் தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி கிடையாது. இதேபோல், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
அதேநேரத்தில் இதுதொடர்பாக குழப்பமும் நிலவி வந்தது. அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகளில் கர்ப்பிணிகள், தாய்மார்கள் ஆகியோர் தடுப்பூசி எடுத்துகொள்ள அனுமதி வழங்கிய நிலையில், இந்தியாவிலும் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில்,கொரோனா தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு அண்மையில் தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருந்தது. இந்த பரிந்துரைகளுக்கும் தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், கர்ப்பணிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குவது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திய 14 நாட்களுக்கு பிறகு ரத்த தானம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
வேறு பாதிப்புக்கு தீவிர சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வாரங்களுக்கு தடுப்பூசி போடுவதைத ஒத்திவைக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
newstm.in