பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது.. உச்சநீதிமன்றம் உருக்கம் !!
பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது.. உச்சநீதிமன்றம் உருக்கம் !!

டெல்லியை சேர்ந்த குஷ்கர்லா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், டெல்லி நகரில் உள்ள சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இப்போது கொரோனா காலத்தில் இந்த பிச்சைக்காரர்களால் மற்றவர்களுக்கு கொரோனா நோய் பரவும் நிலை உருவாகி உள்ளது. எனவே நகரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று நீதிபதிகள் கூறினர். மனுதாரர் தெருக்களில் பிச்சை எடுப்பவர்களை தடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அவர்கள் ஏன் பிச்சை எடுப்பதற்காக தெருக்களுக்கு வருகிறார்கள்? வறுமை வாட்டும்போது அவர்கள் தெரு வீதிக்கு வர வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
உச்சநீதிமன்றத்தால் அவர்களை தடுப்பதற்கு உத்தரவு போட முடியாது. அதற்கான வாய்ப்புகள் இல்லை. இது ஒரு சமூக பிரச்சினை. அரசு, சமூக நல கொள்கைகளை வகுத்து இதற்கு தீர்வு காண வேண்டும். அவர்கள் நம் கண்ணில் படக்கூடாது என்று எங்களால் எந்த உத்தரவும் போட முடியாது. பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு அளிக்கக்கூடிய திட்டங்களை அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டும்.

எந்த சூழ்நிலையில் அவர்கள் பிச்சை எடுக்க வருகிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இது சமூக பொருளாதார பிரச்சினை. அவர்களுக்கு தடை விதிப்பதன் மூலம் இதை சரி செய்துவிட முடியாது. இது சம்பந்தமாக மத்திய அரசு, டெல்லி நகர அரசு ஆகியவை விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம் என நீதிபதிகள் கூறினர்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்கள் தரப்பு மனுதாரர் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்று விளக்கம் அளித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் இந்த வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
newstm.in

