1000 ரூபாய்க்காக காதலர்களை மிரட்டி செல்போன், பணம் பிடுங்கிய எஸ்.ஐ.
கோவையில் காதலர்களிடம் போலீஸ் என பொய் கூறி மிரட்டி பணம் பறித்து வந்த நபர் சிக்கினார். விருதுநகர் மாவட்டம் சூரங்குடியை சேர்ந்த பாண்டிகுமார் என்பவர், கோவை சரவணம்பட்டி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது உதவி ஆய்வாளர் சீருடையில் நின்றுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்,

கோவையில் காதலர்களிடம் போலீஸ் என பொய் கூறி மிரட்டி பணம் பறித்து வந்த நபர் சிக்கினார்.
விருதுநகர் மாவட்டம் சூரங்குடியை சேர்ந்த பாண்டிகுமார் என்பவர், கோவை சரவணம்பட்டி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது உதவி ஆய்வாளர் சீருடையில் நின்றுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், பாண்டிகுமாரின் பைக் வழிமறித்துள்ளார். அவரிடம் ஆர்சி புக், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களையும் கேட்டுள்ளார். ஆவணங்கள் சரியாக இருந்த போதிலும் அவரிடம் பணம் பறிக்கின்ற நோக்கில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்துவதாக மிரட்டி, ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த பாண்டிகுமார் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சரவணம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, காவல் உதவி ஆய்வாளர் உடையில் வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சார்ந்த வினு என்ற வினோத் என்பது தெரியவந்தது.
மேலும், காவல் உதவி ஆய்வாளர் வேடமணிந்து மோசடி மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஏற்கெனவே வினோத் கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், இவர் கடந்த சில நாட்களாக கோவையில் மாணவர்களை மிரட்டி செல்போன் பறித்துச் சென்றது, பல காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தது உள்ளிட்டவையும் கண்டுபிடிக்கப்பட்டது.
newstm.in

