ட்விட்டருக்கு மாற்றாக ‘கூ’ செயலியை நிறுவ மத்திய அரசு முயற்சி..!
ட்விட்டருக்கு மாற்றாக ‘கூ’ செயலியை நிறுவ மத்திய அரசு முயற்சி..!

உள்நாட்டு கண்டுப்பிடிப்புகளை ஊக்குவிக்கும் விதத்தில் ட்விட்டருக்கு மாற்றாக ’கூ’ செயலியை நிறுவும் பணிகளை மத்திய அரசு துவங்கியுள்ளது.
உலக மக்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு இருக்கும் முக்கிய சமூகவலைதளங்களில் ட்விட்டருக்கு மிகப்பெரிய இடமுண்டு. இதில், அரசியல் தலைவர்கள், திரைக்கலைஞர்கள், விளையாட்டு பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பதிவிடப்பட்டுள்ள ட்வீட்டுகளை நீக்க வேண்டும் என மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால் அதற்கு ட்விட்டர் மறுப்பு கூறிவிட்டது. அதை தொடர்ந்து இந்தியாவிலே தயாரான ‘கூ’ செயலிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க துவங்கியது.
கடந்தாண்டு மார்ச்சில் அறிமுகம் செய்யப்பட்ட ‘கூ’ செயலியை ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவில் நிறுவ மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர்களான பியுஸ் கோயல், ரவிசங்கர் பிரசாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பலரும் கூ செயலியை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
இதனுடன் மேட் இன் இந்தியா தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பரபரப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியர்கள் பலரும் கூ செயலியில் இணைந்து வருகின்றனர். ட்விட்டர் செயலி ஆங்கிலத்தில் மட்டுமே இயங்கி வருகிறது. ஆனால் ‘கூ’ செயலி தமிழ், இந்தி, தெலுங்கு, அஸ்ஸாமி, ஒரியா உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளில் இயங்கி வருகிறது. இதனால் தாய்மொழியை மட்டுமே பேச தெரிந்த பயனர்களுக்கு கூ செயலி பயனுள்ளதாக இருக்கும்.
இந்த செயலியை ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவில் நிறுவுவதற்கு மோடி தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இதில் கணக்கு வைத்துள்ள மத்திய அமைச்சகர்கள் மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் அமைச்சகங்கள், தங்களுக்குட்பட்ட முதல் தகவலை ‘கூ’ செயலியில் பதிவிடுவார்கள். அதை தொடர்ந்து ட்விட்டரில் பதிவிடுவார்கள் என அரசு வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

