ஜூன் 30 வரை ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை !!
ஜூன் 30 வரை ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை !!

நாடு முழுவதும் அமலில் உள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலை உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. எனினும் தினசரி பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமாகவே உள்ளது. மத்திய அரசு ஊரடங்கு விதிக்காதப்போதும் அதற்கான அனுமதியை மாநில அரசுகளுக்கு வழங்கியது. அதன்படி பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு விதித்து கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை ஜூன் மாதம் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. எனினும் எந்த பகுதியிலும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து இந்த உத்தரவில் குறிப்பிடவில்லை. இந்த உத்தரவை வெளியிட்டு உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:-
தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்ட செயல்பாடுகளால் வடகிழக்கு மற்றும் தெற்கு மண்டலங்களை தவிர பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய மற்றும் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையில் சற்றே சரிவை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த சரிவு இருந்தபோதும் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போதும் அதிகமாகவே இருக்கிறது. எனவே அதிக எண்ணிக்கையில் தொற்று பரவும் மாவட்டங்களில் உள்ளூர் மட்டத்தில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக தொடர வேண்டும்.
அதேநேரம் தளர்வு நடவடிக்கைகள் தேவைப்பட்டால் உள்ளூர் நிலவரம், தேவைகள் மற்றும் வளங்களை ஆராய்ந்து தகுந்த நேரத்தில் படிப்படியாக தளர்வுகள் வழங்குவது குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிசீலிக்கலாம் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
newstm.in

