முடக்கப்பட்டது சவுக்கு சங்கர் ட்விட்டர்.. சவுக்கை சுழற்றுகிறதா தமிழக காவல்துறை..?
முடக்கப்பட்டது சவுக்கு சங்கர் ட்விட்டர்.. சவுக்கை சுழற்றுகிறதா தமிழக காவல்துறை..?

பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
ஆளும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர்ந்து இணையத்தின் வாயிலாகவும் ட்விட்டர் வாயிலாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருபவர் சவுக்கு சங்கர்.
அத்துடன், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளில் ஊழல்கள் மற்றும் விதிமீறல்கள் போன்றவற்றை பற்றி பொதுவெளியில் பேசி வருகிறார்.
இதனால், இவர் மீது பல அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். சமீபத்தில், தனியார் பத்திரிகை மீது கொடுக்கப்பட்ட புகாரில் மோசடி செய்ததாக இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது.
ஜி ஸ்கொயர் என்னும் கட்டுமான நிறுவனம் கொடுத்த புகாரில் சவுக்கு சங்கரின் பெயரும் இடம் பெற்று இருந்தது. பின்பு தனியார் பத்திரிகை பெயர் நீக்கப்பட்ட போதிலும் இவரது பெயர் நீக்கப்படவில்லை.

சிறிது நாட்களுக்கு முன்னர் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் இவர் மீது புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது சவுக்கு சங்கரின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் தமிழக காவல்துறை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ட்விட்டரில் ஆர்டலி முறை பற்றி அதிகமாக பேசி வந்தார் சவுக்கு சங்கர். மேலும் அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அரசு வாகனங்களை பயன்படுத்தி வருவதையும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
இதனால் கோபமடைந்த அரசு அதிகாரிகள் காவல்துறையை நாடியுள்ளனர் என்றும், இதனால் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தை காவல்துறை முடக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சவுக்கு சங்கர் மீது கைது நடவடிக்கையும் பாய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

