அவதூறு, மதக்கலவரம் செய்ய தூண்டுதல் என புகார்.. சிக்குகிறார் பாஜக இளைஞரணி தலைவர்
அவதூறு, மதக்கலவரம் செய்ய தூண்டுதல் என புகார்.. சிக்குகிறார் பாஜக இளைஞரணி தலைவர்

தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவராக உள்ள வினோஜ் செல்வம் நீண்டகாலமாகவே மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பொய்யான தகவலை, வதந்தியை பரப்பும் வகையில் பதிவிட்டு வருவதாக புகார் உள்ளது.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் மீது புகார் கொடுத்தார். அந்தப்புகாரில், வினோஜ் செல்வம் என்பவர் தன்னுடைய ட்விட்டர் ஹேண்டிலில், பொய்யான தகவலை, வதந்தியை மக்களிடையே பரப்பும் நோக்கில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவானது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையிலும், உள்ளதால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
மேற்கொண்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது சைபர் க்ரைம் பிரிவில் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதனையடுத்து வினோஜ் செல்வம் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளையும், உண்மை செய்திகளை திரித்தும் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்போன்றவற்றில் வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
newstm.in

