தொடர்ந்து கொலை மிரட்டல்.. மதம் மாறினார் வக்பு வாரிய முன்னாள் தலைவர்..!
தொடர்ந்து கொலை மிரட்டல்.. மதம் மாறினார் வக்பு வாரிய முன்னாள் தலைவர்..!

உத்தரபிரதேச ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறி இந்து மதத்திற்கு மாறினார். மேலும் தனது பெயரை ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி எனவும் மாற்றினார்.

உத்தரபிரதேச ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்த வசீம் ரிஸ்வி, குர்ஆனில் இருந்து வன்முறையைப் போதித்ததாகக் கூறி, சில வசனங்களை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், வழக்கு தொடர்ந்த வசீம் ரிஸ்விக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாற முடிவு செய்தார்.
அதன்படி, காசியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோவிலின் தலைமை பூசாரி யத்தி நரசிங்கானந்த் என்பவர் முன்னிலையில் இந்து மதத்திற்கு மாறினார். மதத்திற்கு மாறியதுடன், தனது பெயரை ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி எனவும் மாற்றிக்கொண்டார்.

இது குறித்து பேசிய ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி, “நான் இஸ்லாம் மதத்தில் இருந்து நீக்கப்பட்டேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என் தலைக்கு பரிசுத் தொகை அதிகரிக்கப்படுகிறது. இன்று நான் சனாதன தர்மத்தைத் தழுவுகிறேன்” எனக் கூறினார்.

