கொரோனா பீதியால் முடங்கிய உலகம்.. சத்தமில்லாமல் நிகழ்ந்த அற்புதம்!!
கொரோனா பீதியால் முடங்கிய உலகம்.. சத்தமில்லாமல் நிகழ்ந்த அற்புதம்!!

கொரோனா வைரசால் உலகமே கதிகலங்கிப் போய் உள்ளது. எங்கு பார்த்தாலும் நகரங்கள் முடக்கம், மக்கள் வெளியே வர தடை என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால், அதன் மூலம் சுற்றுச்சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளாலும் வெளியிடப்படும் கார்பன் மோனாக்சைடு, கந்தக ஈராக்சைடு, குளோரோ புளோரோ கார்பன்கள், நைட்ரஜன் ஆக்சைடுகள் அதிகமானால் சுற்றுசூழல் மாசடைகிறது. தற்போது இவை வெகுவாக குறைந்து சுற்றுசூழல் மாசுபாடு ஓரளவு குறைந்துள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக எங்கெல்லாம் பொதுமக்களுக்கு கொரோனா அதிக பாதிப்பை விளைவித்ததோ அங்கெல்லாம் இயற்கை மீண்டு எழுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கொரோனாவால் மக்களின் நுகர்வு வெகுவாக குறைந்து ஏற்பட்ட மாற்றத்தால் கடந்த நான்கு வாரங்களில் சுற்றுசூழல் மாசு 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதற்கு காரணம் தொழிற்சாலைகள் முடங்கி இதன் நடவடிக்கைகள் 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்துவிட்டதுதான். அதேபோன்று மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி நுகர்வு 36 சதவீதம் வரை குறைந்துள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

அதே போன்று இத்தாலியில் பொது மக்களின் அன்றாட வாழ்வு முடங்கி விட்டது. உலக புகழ்பெற்ற நீர் சூழ் நகரமான வெனீசில் மாசடைந்து கிடந்த நீர்நிலைகள் சுத்தமாகி வருகிறது. இதுபோன்று உலகின் பல்வேறு இடங்களிலும் சுற்றுசூழலில் பாதிப்பு குறைந்து, நன்மை ஏற்பட்டுள்ளது. கொரோனா பெரும் பாதிப்பை உண்டாக்கி வந்தாலும் மக்கள் மத்தியில் சுகாதாரம் மற்றும் இயற்கை மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
newstm.in

