கொரோனா வைரஸ் பாதிப்பு...சீனாவில் பலி எண்ணிக்கை 1,011 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பு! பலி எண்ணிக்கை 1,011 ஆக உயர்வு!!

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. வைரஸ் பாதிப்பினால் கடந்த 8ஆம் தேதி வரை 723 பேர் பலியாகி இருந்தனர். இதேபோன்று 34 ஆயிரத்து 598 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு இருந்தது என சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். பின் உகான் நகரிலுள்ள ஜின்யின்டாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமெரிக்காவை சேர்ந்த 60 வயது நிறைந்த பெண் ஒருவரும், உகான் நகரில் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த 60 வயது நபர் ஒருவரும் உயிரிழந்தனர்.
இதனால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் என முதன்முறையாக வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானது உறுதியானது. இதேபோன்று, பிலிப்பைன்ஸ் தீவில் சீனர் ஒருவர் மற்றும் ஹாங்காங் நாட்டில் 39 வயது நிறைந்த ஒருவர் என சீனாவை தவிர்த்து வெளிநாடுகளில் இருவர் பலியாகி உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு 774 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், அதன் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்தது.
நேற்று, 91 பேர் உயிரிழந்த நிலையில் வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்தது. இதேபோன்று 40,171 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதனிடையே, சீனாவில் கூடுதலாக 103 பேர் உயிரிழந்த நிலையில், வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 1,011 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது. 2,097 பேர் கூடுதலாக பாதிப்படைந்து உள்ளனர் என உறுதி செய்யப்பட்டு உள்ளது.
newstm.in

