மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!!
மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!!

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரம் மற்றும் கலால் வரித் துறை அமைச்சராக இருந்தவர் பி. தங்கமணி. இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சட்டவிரோதமாக தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 15-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. தங்கமணி மீது வருமானத்திற்கு அதிமான சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ஏராளமான ரொக்கம், தங்கம், வெள்ளி, மற்றும் ஊழல் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களிலும், சேலம் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய மொத்தம் 14 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

