ஒரே இடத்தில் மட்டும் ரூ.3 கோடிக்கு ஊழல்.. அப்போ தமிழகம் முழுவதும்?
ஒரே இடத்தில் மட்டும் ரூ.3 கோடிக்கு ஊழல்.. அப்போ தமிழகம் முழுவதும்?

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆவின் நிறுவனம் விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளர் ரமேஷ்குமார், வர்த்தக பிரிவு மேலாளர் ஐங்கரன் ஆகியோர் பலரிடமும் லஞ்சம் பெற்று கொண்டு பல்வேறு இடங்களிலும் புதியதாக ஆவின் பாலகங்களை அமைத்து தருவதாகவும், ஆவின் பால் பொருட்கள் விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தது.
தொடர்ந்து குவிந்த புகார்களால் உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இப்புகார்களின் அடிப்படையில் ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர், விழுப்புரத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று பிற்பகல் முதல் நடைப்பெற்ற சோதனையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் புதியதாக ஆவின் பாலகங்களை அமைக்க உத்தரவு வழங்கியது, ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்வதில் முறைகேடு, பால் சுத்திகரிப்பு இயந்திரங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு என ரூ.3 கோடிக்கு ஊழல் நடைப்பெற்றிருப்பதற்கான முக்கிய ஆவணங்களை ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு விழுப்புரம் ஆவின் நிறுவன பொது மேலாளர் ரமேஷ்குமார், ஆவின் நிறுவன வர்த்தக மேலாளர் ஐங்கரன் உள்ளிட்டோரிடம் ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ரூ.3 கோடி ஊழல் நடைப்பெற்றதை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

