கிரிக்கெட் ரசிகர்கள் செம ஹேப்பி.. 20- 20 உலகக்கோப்பைக்கும் அனுமதி அளித்தது ஐசிசி !!
கிரிக்கெட் ரசிகர்கள் செம ஹேப்பி.. 20- 20 உலகக்கோப்பைக்கும் அனுமதி அளித்தது ஐசிசி !!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண 70 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அதேபோல், 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது . ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் போட்டிகள் நடைபெறும் என்று ஐசிசி ஏற்கனவே தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது .

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண 70 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது. ஓமனில் நடைபெறும் போட்டியை 3000 ரசிகர்கள் வரை பார்க்க அனுமதிக்கப்படலாம் என்று (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது.
ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2019ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு, இந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் சந்திக்க இருக்கின்றன. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 25ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது .
newstm.in

