இந்திய சீனியர் கிரிக்கெட் வீரர்களுக்கு நெருக்கடி? என்ன செய்யப்போகிறது பிசிசிஐ !
இந்திய சீனியர் கிரிக்கெட் வீரர்களுக்கு நெருக்கடி? என்ன செய்யப்போகிறது பிசிசிஐ !

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9ஆம் தேதி இந்தியாவில் துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. எனினும் எதிர்பாராத நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் உட்பட சில வீரர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 29 போட்டிகள்தான் நடத்தப்பட்டது. 31 போட்டிகள் எஞ்சியிருந்தது.
மீதமுள்ள இந்த 31 போட்டிகளும் எப்போது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.
அதன்படி ஐபிஎல் திருவிழா நாளை முதல் தொடங்குகிறது. இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் பங்கேற்ற இந்திய வீரர்கள் 6 நாட்கள் தனிமை முகாமிற்குச் சென்றுள்ளனர். 19ஆவது தேதி துவங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளதால், முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கொரோனாவுக்குப் பிறகு ஐபிஎல் தொடரை முதல்முறையாக நேரில் பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால் தற்போது தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இணையம் மூலம் மீட்டிங் நடத்தியுள்ளனர். அப்போது பிளே ஆஃப் சுற்றின்போது முன்னணி வீரர்கள் விராட் கோலி , ரோஹித் ஷர்மா , ஜஸ்பரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்திய வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இருந்து 2 மாதங்கள் ஓய்வு இல்லாமல் விளையாடிய நிலையில், அதனை தொடர்ந்து சில நாட்கள் இடைவெளியில் ஐபிஎலில் பங்கேற்கவுள்ளனர். இத்தொடர் முடிந்த அடுத்த இரண்டு நாட்களில், அக்டோபர் 17ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடர் துவங்கிவிடும். இப்படி தொடர்ந்து ஓய்வில்லாமல் இருக்கும் இந்திய வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் மன அழுத்தத்துடன் விளையாடும் சூழல் உள்ளது.
எனவே, டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் புத்துணர்ச்சியுடன் களமிறங்க வேண்டும் என்பதற்காக, ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின்போது, இந்திய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகிகள், அணி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இதனை சற்றும் எதிர்பாராத அணி உரிமையாளர்கள், இந்த முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம் என கறாராகத் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தற்போது இருக்கும் ஒரே இலக்கு ஐபிஎல் கோப்பை என்பதால், வீரர்களுக்கு ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என உறுதியாகக் கூறிவிட்டார்களாம். இதுகுறித்து மீண்டும் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தும் என கூறப்படுகிறது.
newstm.in

