எங்கள் அரசை ஏற்காவிட்டால் உலகிற்கே ஆபத்து: அமெரிக்காவுக்கு தலிபான்கள் பகீரங்க எச்சரிக்கை !!
எங்கள் அரசை ஏற்காவிட்டால் உலகிற்கே ஆபத்து: அமெரிக்காவுக்கு தலிபான்கள் பகீரங்க எச்சரிக்கை !!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசை அங்கீகரிக்கத் தவறுவதும், வெளிநாடுகளில் ஆப்கானிஸ்தான் நிதியை தொடர்ந்து முடக்குவதும் இந்த பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் உலகிற்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்று தலிபான்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர்.
ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டை தலிபான்கள் தங்கள் பிடிக்குள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றினர். அதிபராக இருந்த அஷரப் கனி வெளிநாட்டிற்கு தப்பியோடினார். அதேபோல் ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்.

இதனிடையே, தலிபான்கள் ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே கடந்த 1990 களில் தலிபான்களின் ஆட்சி, ஆப்கானிஸ்தானில் கொடுங்கோல் ஆட்சியாக இருந்தது.
இதனிடையே, தலிபான் அரசு அமைத்துக்கொண்டாலும் எந்த நாடும் தலிபான் அரசை முறையாக அங்கீகரிக்கவில்லை. சீனாவும் பாகிஸ்தானும் மட்டுமே தலிபான்களுடன் நல்லுறவை பேணி வருகின்றன. தலிபான்களுடன் முறையான உறவை ஏற்படுத்துமாறு உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசை அங்கீகரிக்கத் தவறுவதும், வெளிநாடுகளில் ஆப்கானிஸ்தான் நிதியை தொடர்ந்து முடக்குவதும் இந்த பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் உலகிற்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்று தலிபான்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாகீதின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அமெரிக்காவிற்கு எங்களின் செய்தி என்னவென்றால், அங்கீகரிக்கப்படாத நிலை தொடர்ந்தால், ஆப்கானிஸ்தான் பிரச்சனைகள் தொடர்ந்தால், அது பிராந்தியதில் அமைதியற்ற நிலை ஏற்படுவதுடன் உலகிற்கு ஒரு பிரச்சனையாக மாறும். தலிபான்களும் அமெரிக்காவும் கடந்த முறை போருக்குச் சென்றதற்குக் காரணம் இருவருக்கும் முறையான ராஜதந்திர உறவுகள் இல்லாததே .
ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை மீண்டும் திறக்குமாறு தலிபான் அரசு அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் தூதரக உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம், இதன் மூலம் நாங்கள் முறையான மற்றும் நல்ல உறவுகளை பராமரிக்க முடியும்.

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய செய்திகள் உண்மையல்ல. அமெரிக்கா பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவது சாத்தியமல்ல. ஆப்கானிஸ்தான் வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். அவ்வாறு ஏதேனும் நடந்தால் நிச்சயமாக தடுத்து நிறுத்துவோம், இவ்வாறு அவர் கூறினார்.
மிரட்டும் வகையில் வெளிப்படையாகவே தலிபான்கள் கூறியிருப்பது பெரும் சர்ச்சையையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

