வெறிச்சோடி காணப்படும் சாலைகள்.. அமலுக்கு வந்ததால் வீடுகளில் முடங்கிய மக்கள் !
வெறிச்சோடி காணப்படும் சாலைகள்.. அமலுக்கு வந்ததால் வீடுகளில் முடங்கிய மக்கள் !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதற்கிடையில், ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து பொதுப்போக்குவரத்து, மெட்ரோ ரயில் ஆகியவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்த ரயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி உண்டு. ஆனால் போலீசாரின் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் ஆகியவை இன்று திறக்கப்படாது. ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு நீடிக்கும் நிலையில், சென்னையின் முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியே தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். கொரோனா பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மருத்துவத்துறையும், காவல்துறையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
newstm.in

