பாழடைந்து கிடக்கும் வேலு நாச்சியார், மருது சகோதரர்களின் போர் பயிற்சி கூடம்!!
பாழடைந்து கிடக்கும் வேலு நாச்சியார், மருது சகோதரர்களின் போர் பயிற்சி கூடம்!!

விடுதலைப் போராட்ட வீரர்களான வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் போர் பயிற்சிக் கூடம் பாழடைந்து கிடப்பதால் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சங்கரபதி கோட்டை சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மன்னர் சேதுபதி தன்னுடைய மகளான வேலு நாச்சியாருக்கு போர் பயிற்சிகள் அனைத்தும் கற்றுக் கொடுத்து சிவகங்கை மன்னரான முத்து வடுகநாதருக்கு மணமுடித்து கொடுத்தார்.
அப்போது சீதனமாகக் கொடுக்கப்பட்டது தான் சங்கரபதி கோட்டை. 50 ஏக்கர் பரப்பளவுள்ள காட்டு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட சதுரடி பரப்பளவில் பிரம்மாண்டமாக சாந்து கலவை கருகல் தூண்கள் மூலம் கோட்டை கட்டப்பட்டது.

வீரர்களுக்கு போர் பயிற்சி செய்வதற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. இப்படி வரலாற்று சிறப்புகளை கொண்ட கோட்டை இப்போது பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. கோட்டைக்குள் யாரும் செல்ல முடியாதபடி இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.
எனவே பல்வேறு வரலாறுகளை தன்னுள் வைத்திருக்கும் இந்தக் கோட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
newstm.in

