இயக்குநர் கே.வி.ஆனந்த் மரணம்! தானே கார் ஓட்டிச் சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆனார்!
இயக்குநர் கே.வி.ஆனந்த் மரணம்! தானே கார் ஓட்டிச் சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆனார்!

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
தமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் அடுத்து இயக்குநர் கே.வி. ஆனந்தை இழந்திருக்கிறது.

பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர். பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க 'கனா கண்டேன்' எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து 'அயன்', 'மாற்றான்', 'காப்பான்' எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார்.
கொரோனாவோ வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் கே.வி.ஆனந்துக்கு நேற்று நள்ளிரவில் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரே காரை ஓட்டிக் கொண்டு மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார். ஆனாலும், அவரது உயிரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. இன்று அதிகாலை 3 மணி அளவில் இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணமடைந்தார். தற்போது மருத்துவமனையில் இருக்கும் அவரது உடல் குடும்பத்தினரிடம் காலை 9 மணிக்கு மேல் ஒப்படைக்கப்படும் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

